Monday, May 01, 2006

தேர்தல், நிர்வாக சீர்திருத்தங்கள்

நம்முடைய தேர்தல் முறைகளிலும், நிர்வாக முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வேண்டுமென தேர்தல் நேரங்களில் கூக்குரல் எழுந்து கொண்டே இருக்கும். அரசாங்க அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் தான் ஜனநாயகத்தின் அதி முக்கியமான தூண்கள். இந்த தூண்கள் இந்தியாவில் எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன ? மாற்று வழிகள் என்ன ? தேர்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா, அது குறித்த எனது பார்வை

அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்க ஊழியர்களிடமே உள்ளது. அரசியல்வாதிகள் 5வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசாங்க ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யாத நிலையிலும் ஓய்வுக் காலம் வரை பணியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பலவற்றில் காலதாமதம், ஊழல் போன்றவை மலிந்து போய் இருக்கின்றன. சாதாரண மக்களுக்கு காலதாமதப்படுத்தப்படும் நலதிட்டங்கள் முதல் பெரும் முதலீட்டிற்கு, வணிகத்திற்கு தேவைப்படும் லைசன்ஸ் வரை இந்தியாவில் ஒரு மோசமான inefficienecy அரசு அலுவலங்களில் பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில முன்னேற்றங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டு இருந்தாலும் இன்னமும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படுகிறது.

அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கு இடையே நிறைய வேறுபாட்டினை காண முடியும். அமெரிக்க நிர்வாக அமைப்பைக் குறித்து ஓரளவிற்கு கேள்விப்பட்டிருந்தாலும், அந்த நிர்வாக அமைப்புகளில் பங்காற்றும் பத்மா போன்றவர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுது ஆச்சரியாகவே இருக்கும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை, நீண்ட காலமாக ஜனநாயக முறைப்படி இருக்கு ஒரு அரசமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பிடு அல்ல. என்றாலும் அமெரிக்கா போன்ற ஒரு முறையை நோக்கி நாம் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதன் காரணத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இங்கு அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பல விடயங்கள் குறித்த நேரத்தில் மிகச் சரியாக நடந்து விடுகிறது. உதாரணமாக குழந்தைப் பிறப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை வேறு ஒரு நகரத்தில் பிறந்தாலும் ஒருவர் வசிக்கும் நகரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு அந்த தகவல் மருத்துவமனை மூலம் அனுப்பப்படுகிறது. அந்த நகரில் இருக்கும் சுகாதார மையம் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு அரசு சுகாதார நிலையங்கள் என்ன சலுகைகளை வழங்குகின்றன என்பன போன்ற விபரங்களை தெரியப்படுத்துகிறது. இதனால் அரசாங்கத்தின் சலுகைகள் குறித்த விபரங்கள் தெரியாதவருக்கும் அது குறித்து தெரியவருகிறது. அந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்வதிலும் எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை.

இங்கு அரசு தன்னுடைய நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுப்பதும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையால் சரியாக கண்காணிக்கப்படுவதும் தான் அரசின் இயக்கம் சரியாக நடைபெற முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஒரு விடயம் குறித்து என்ன நடக்க வேண்டும் என்பது முறையாக கணினி மூலம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் படி குழந்தைப் பிறப்பு போன்றவை நடந்தால், அரசின் பலப் பிரிவுகள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விபரங்கள் முறையாக நடந்து விடுகின்றன. இணையத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று அவர்களுக்கு அனுப்பி விட்டால் சரியான நேரத்தில் பிறப்பு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். இடைப்பட்ட காலத்தில் என்ன நிலவரம் என்று கேட்க உட்கார்ந்த இடத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்தால் அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் பொறுப்புடன் பதிலளிப்பார்கள். அது போல வருமானம் குறைவாக உள்ள மக்களுக்கு Social Security மூலம் மருந்துகள் போன்றவை வழங்கும் முறை இருக்கிறது. ஒரு SSN அலுவலகத்தில் சென்று விண்ணபித்தால் அரசின் சலுகை நமக்கு வந்து சேர்ந்து விடும்.

இங்குள்ள அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் Quality certification பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்களில் தங்கள் வாடிக்கையாளரை கவனிப்பது போன்று அரசின் சலுகைகளைப் பெறச் செல்பவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் மிகவும் கண்ணியமாக, மரியாதையுடனே நமக்கான சலுகைகள் குறித்த விபரங்களை தெளிவாக கூறி, நாம் இந்தச் சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார்கள். இங்கும் பிரச்சனைகளும், காலதாமதமும் இருக்கவேச் செய்கின்றன. ஆனால் அவ்வாறு நடப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் அரசு அலுவலகங்கள் இந்த முறையை நோக்கி கட்டாயம் செல்ல வேண்டும். இந்த முறை மூலம் ஒருவரின் விண்ணப்பம் அரசு அலுவலகர்களால் தேவையில்லாமல் தேக்கி வைக்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அது மேலதிகாரியின் கவனத்திற்கு செல்வது போன்ற முறை வரும் பொழுது விண்ணப்பங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில் SSN எண் நமக்கு தேவை என்று விண்ணப்பித்தால் அது இரண்டு வாரங்களில் வழக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, அந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளை எளிமையாக்குவது போன்றவை கணினி மயமாக்குவது மூலம் சாத்தியமாகும். இது அரசு ஊழியர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் உதவும். தனியார் நிறுவனங்களில் Appraisal என்று ஒன்று உண்டு. கடந்த வருடத்தில் ஒருவரின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் தான் ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கப்படும். ஆனால் இவ்வாறான முறை அரசு அலுவலகங்களில் சரியாக முறைப்படுத்தப்படுவதில்லை. இதனாலேயே அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் செல்லும் பொழுது ஒரு அலட்சிய போக்கு நிலவுகிறது. சில நேரங்களில் "எங்கு வேண்டுமானாலும் போய் முறையிட்டுக்கொள்" போன்ற முரட்டுத்தனமான பதில் வந்து சேரும். எங்கு சென்று இது குறித்து முறையிடுவது என்பதும் பொதுமக்களுக்கு தெரிவதில்லை என்பதால், சாதாரண மக்கள் தங்கள் காரியத்தைச் சாதித்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் போன்றவற்றை கொடுத்து விடுகிறார்கள். விண்ணப்பம், தகுதிச் சான்றிதழ் என எல்லாம் இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நிறைவேறும். விண்ணப்பங்கள் எப்பொழுது விண்ணப்பிக்கப்பட்டது, ஏன் காலதாமதம் ஆகிறது போன்றவை குறித்த எந்த விபரங்களும் சரியான முறையில் பாராமரிக்கப்படுவதில்லை என்பதால் மக்களின் பிரச்சனைகள் சரியாக கண்காணிக்கப்படுவதில்லை.

அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்படுவதும், மக்களின் விண்ணப்பங்கள் முறைகளை எளிமைப்படுத்துவதும் பலப் பிரச்சனைகளை ஓரளவு தீர்க்கும், அரசின் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு குறிப்பிட்ட பிரிவு மக்களை எட்டுகிறது போன்றவையும் கணினி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் எந்தச் செயல்பாடும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அரசின் செயல்பாடு குறித்தோ, குறிப்பிட்ட திட்டங்களில் யார் யாருக்கு திட்டங்கள் ஒழுங்காக சென்று சேருகிறது என்பது குறித்தோ விபரங்கள் கேட்கும் பொழுது அதனை கொடுக்கும் வசதி கொண்டு வரப்பட வேண்டும். Right to get the information என்பது அமலாக்கப்படும் பொழுது அந்த திட்டங்களை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற அக்கறையும் அரசு அலுவலங்களுக்கு ஏற்படும் (இது குறித்தச் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது). ஒவ்வொரு அரசு அலுவலங்களும் Quality certification பெற வேண்டும்.

ஆனால் நாட்டில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் இதனை "மக்கள் பிரதிநிதிகள்" தான் செய்ய வேண்டும். நாட்டில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றால் ஜனநாயகத்தின் அதிமுக்கியமான தூண்களான மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பிரநிதிகளாக "சரியாக" செயலாற்ற வேண்டும். இந்தியாவில் மக்களின் பிரநிதிகள் சரியான முறையில் செயலாற்றுகிறார்களா என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அரசியல் முறை குறித்த விமர்சனங்களை கவனிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா?

இந்தியா பெரும்பான்மையைச் சார்ந்த தேர்தல் முறையைக் கொண்டுள்ளது. இதனை First-Past-the-Post (FPTP) system என்று கூறுவார்கள். யார் அதிக ஓட்டுக்களைப் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். யார் அதிக தொகுதிகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள். இங்கு எண்ணிக்கை தான் முக்கியம். அந்த எண்ணிக்கையைப் பெற ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். இந்த தொகுதிகளை வெல்ல பணபலம் பொருந்திய, சாதியமைப்பைச் சார்ந்த வேட்பாளர்களையே அரசியல் தலைவர்கள் முன்நிறுத்துகிறார்கள். ஏனெனில் ஓட்டுக்களைப் பெற அது தான் முக்கியம் என்ற கருத்து இங்கு நிலை நிறுத்தப்பட்டு விட்டது. பணபலம், அந்த தொகுதியில் அதிகார பலம், சாதி பலம் இவற்றை உடையவர்கள் தான் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். தங்களுக்கு எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக எந்த வித நியாயங்களுக்கும் கட்டுப்படாமல் இவ்வாறான வேட்பாளர்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன. இதனால் தகுதியற்ற நபர்களே மக்களின் பிரதிநிதிகளாக மாறி விடுகிறார்கள். தகுதியான படித்தவர்கள், அறிவுஜீவிகள், சிந்தனை வளம் உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அரசியலில் தகுதியற்றவர்கள் அதிக அளவில் இருக்கும் பொழுது மக்களிடம் இருந்து இந்த அரசியல் முறை அந்நியப்பட்டு போய் விடுகிறது. ஆட்சியமைப்பு, மக்கள் நலம் போன்றவைக்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்து சாதி, பணபலம் இவை தான் முக்கியம் என்றாகி விடுகிறது. சாதி, மத உணர்வுகள் தலைதூக்குகின்றன. இந்த உணர்வுகளை தூண்டி விடும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. அதனால் தங்களுடைய சாதி, மத அபிமானம், அரசியல் கட்சி சார்ந்த அபிமானம் போன்றவற்றையே மக்கள் தேர்தல்களில் முன்நிறுத்துகின்றனர்.

மக்களை கவர்ந்து அதிக ஓட்டுக்களைப் பெறுவதற்காக எல்லாவித உத்திகளையும் இன்று அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கொண்டிருக்கின்றனர். இந்த இலவசங்களை வழங்குவது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பினால் எங்கே தங்களுக்கு ஓட்டுக்கள் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எல்லா கட்சிகளும் இதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் முறை மீதான அவநம்பிக்கையால் கிட்டதட்ட 20% மக்கள் வாக்களிப்பதில்லை. இன்னும் குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த தேர்தல் மேல் அக்கறை கொள்வதும் இல்லை என்ற மோசமான ஜனநாயக நிலை தான் இன்று இந்தியாவில் இருந்து வருகிறது.

இந் நிலையில் இந்த தேர்தல் முறையில் இருந்து மாற்றம் பெற்று பிரதிநிதித்துவ முறைகளை பின்பற்றலாம் என்ற ஒரு யோசனையை (Proportional Systems) சிலர் கூறி வருகிறார்கள். இந்த முறை சரியானது தானா, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதா என்பது ஒரு புறம் இருக்க, இந்த முறையை நிச்சயமாக இந்தியாவில் கொண்டு வரக்கூடிய சாத்தியங்கள் எதுவும் இல்லை என்று சொல்ல முடியும். ஒரு தேர்தல் முறையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அதனை வேறு ஒரு புதிய கட்டமைப்புக்குள் கொண்டு வருவது சாத்தியமானது அன்று. அதுவும் இந்தியா போன்று நிறுவனப்படுத்தப்பட்டு விட்ட நாடுகளில் இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் குறித்து விவாதிக்கலாமே தவிர அதனை நடைமுறையில் கொண்டு வருவதும், இப்பொழுது இருக்கும் முறையை முற்றிலும் மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது.

ஒரு சரியான தேர்தல் சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பொழுது, அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை எதிர்த்து ஒரு அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றியும் விட்டார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு ஒரு மாற்று தேர்தல் முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் ? அதுவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த முறை தான் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த சாதகமாகவும் உள்ளது. எனவே தேர்தல் முறைகளில் இந்தியாவில் மாற்றம் சாத்தியமற்றது.

அரசியல் முறை சீர்குலைந்து போனதற்கு முக்கிய காரணம், ஓட்டுக்களைப் பெறுவதற்காக அரசியல்கட்சிகள் பணபலத்தை பிரயோகிப்பது, சாதி மத உணர்வுகளை தூண்டுவது, தகுதியான நபர்களை புறக்கணித்து விட்டு பணபலம், சாதி பலம் இருக்கின்ற வேட்பாளர்களையே முன்நிறுத்துவது போன்றவை தான். இந்த முறைகளை ஒழிக்க சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு பணம் வழங்குவது போன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் பரிசீலனையில் இருந்தன. இதனால் தேர்தல் முறையில் ஊழல் குறையும் என்று கூறப்பட்டது. அரசியலில் கிரிமினல்களின் தலையீடுகளைக் குறைக்க இருக்கும் சட்டங்களும் அவ்வளவு பலமாக இல்லை. இந்தச் சட்டங்களை கடுமையாக்க சுப்ரீம் கோர்ட் எடுத்த நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் தடுத்து விடுகின்றன.

இருக்கின்ற சட்டங்களும் தீர்வாக வில்லை, புதிய சட்டங்களையும் இயற்ற முடியாது, சட்டங்களை பலப்படுத்தவும் அரசியல் கட்சிகள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை, இருக்கின்ற தேர்தல் முறைகளையும் மாற்ற முடியாது, மாற்று சிந்தனைகளை நடைமுறை படுத்த முடியாது என பலச் சிக்கல்கள் இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு உள்ளது ?

இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் திருவிழாவாகவும், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சி அமைக்க ஒரு அரசு வேண்டும் என்பதை நோக்கியும் தான் இருந்து விடுமா ? இந்திய ஜனநாயகம் சரிந்து செல்லரித்து விடுமா ? இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்வதில் உண்மையான அர்த்தம் ஏதேனும் உள்ளதா ?

ஜனநாயகம் என்பதே மக்களுக்காகத் தான். ஜனநாயக முறைகளில் மாற்றம் கொண்டு வருவதும் சாமானிய மக்கள் கைகளில் தான் இருக்கிறது. இவ்வளவு அவநம்பிக்கை இந்திய ஜனநாயக முறைகளில் இருக்கும் பொழுதும் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற பணம், சாதி, மதம் போன்றவை போதும் என்ற நிலை மாறி, மக்களுக்காக செயலாற்றினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இந்திய ஜனநாயகம் தானாகவே மாறியுள்ளதை கவனிக்க முடியும். தேர்தல் சமயங்களில் பல இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசினாலும் அரசின் செயல்பாட்டினைப் பொறுத்தே அரசியல் கட்சிகளை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது தெரியவரும்.

அரிசி 1ரூ என்று ஆந்திராவில் ஓட்டுக் கேட்ட காங்கிரஸ், அதனை எதிர்த்து நான் அப்படி கேட்க மாட்டேன் என்று ஓட்டுக் கேட்ட சந்திரபாபு நாயுடு என்ற இருவரில் சந்திரபாபு நாயுடுவைத் தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால் அதே சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு பின்பு அவரும் தூக்கியெறியப்பட்டது தனிக்கதை. என்றாலும் மக்களின் தீர்ப்பு இந்த இலவசங்களை பொறுத்து மட்டுமே இருப்பதில்லை. அரசின் செயல்பாடும் தேர்தலில் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருக்கிறது என்பதற்கு சிறு சான்று தான் இது. இந்திய ஜனநாயக முறையில் கடந்த 10ஆண்டுகளில் மக்கள் தங்களுடைய வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த பலமான மாற்றங்களால் அரசியல்வாதிகள் செயல்படும் போக்கு மாறியிருக்கிறது. தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மக்களை கவர வேண்டும் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டு விட்டது. இந்த நிலை இன்னும் பலமாகும் பொழுது ஆட்சிக்கு வந்தால் ஆட்டம் போட வேண்டும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு ஏற்படாது. இதே தேர்தல் முறையுடன் தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுதல் போன்ற முறை வந்தால், இந்தியாவில் இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அது போன்ற ஒரு முறையை கொண்டு வருவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவில் ஜனநாயகம் அமைக்கப்பெற்று 55ஆண்டுகளே ஆகின்றன. வளர்ந்த நாடுகளின் சில நூறு ஆண்டுகள் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதை சவால் நிறைந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று சொல்லப்பட்ட வாதத்தை இந்தியா மறுத்துள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டமாக தொடங்கிய பல நாடுகளின் போராட்டங்கள் இறுதியில் சர்வாதிகாரமுறைக்கு தான் வழி அமைத்து இருக்கின்றன. பிரபலமான மக்கள் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டம் ஜனநாயக வழிமுறைக்கு உத்திரவாதம் அளித்ததுடன் மட்டுமில்லாமல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முறையை காப்பாற்றியே வந்துள்ளது. பல சவால்களை கடந்து, இன்னும் பல சவால்களை எதிர்கொண்டுச் செல்லத் தான் போகிறது.

கடந்த காலங்களில் இருந்த கல்வியறிவின்மை, ஏழ்மை குறைந்து இன்று இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவாகும் நிலையில் இருக்கிறது. ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க, மாற்றம் பெற பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணியாகவே பல நாடுகளில் இருந்துள்ளது. இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று திடமாக நம்புவர்களின் நானும் ஒருவன்.

1 மறுமொழிகள்:

aathirai said...

தகவல் அறியும் சட்டத்தை இந்தியாவில் (தமிழ்நாட்டில் )கருணாநிதி்
முதலில் கொண்டு வந்ததாக கீற்றுவில் படித்தேன்.

11:22 AM, May 02, 2006